சீன தேசத்தின் கடற்கரைகள் நெருங்கி வர வர ஹட்சன் தனது மிஷனரிப்பணிக்காக கொண்டு வந்த மருத்துவ கருவிகள், மருந்துகள், பிற பொருட்கள் யாவையும் தனித்தனியாக பிரித்து வைத்து மூட்டைகளாகக் கட்டிக் கொண்டார். அவரது கப்பல் பிரயாணத்தின் கடைசி கட்டத்தில் கடலானது கொந்தளிப்பாகவும், காலநிலையானது உறைபனியாகவும் இருந்தது. தனது கப்பலுக்கு அருகாமையில் சீன தேசத்தின் சிறு சிறு அழகான படகுகள் சென்று கொண்டிருப்பதைக் கண்ட ஹட்சன், தனது நீண்ட கப்பல் யாத்திரை விரைந்து ஒரு முடிவுக்கு வரப்போவதைக் கண்டு மிகவும் சந்தோசம் அடைந்தார். 1854 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் தேதி புதன் கிழமை ஹட்சன் சீன தேசத்தின் ஷாங்காய் நகரத்தையும், சீன தேசத்தின் பெரிய நதியான யாங்சூ நதியின் கிளை நதியான ஹங்க்பூ நதியையும் கண்டார். அந்த நாளின் மாலை வேளை சுமார் 5 மணிக்கு அவர் சீன மண்ணில் மிஷனரியாக கால் எடுத்து வைத்தார். அந்த சீன நாட்டில் வித்தியாசமான குரல் ஒலிகளும், அவர்களின் சரீரத்திலிருந்து எழுந்த வாசனைகளும் (மணமான வாசனைகள் அல்ல) சீன மக்களின் சிங்கார கைவேலைப்பாடான கிழக்கத்திய வீடுகளும் இளம் ஆங்கில வாலிபனான ஹட்சனுக்கு பார்க்கப் பார்க்கப் பரவசமாக இருந்தது. ஆனால் அவருடைய அந்தராத்துமா அந்த ஷாங்காய் பட்டணத்தில் வாழ்கின்ற ஜீவனுள்ள தேவனை அறியாத சீன மக்களுக்காக அழுது அங்கலாய்த்தது. கடந்த சுமார் 6 மாத காலங்களாக தனது நீண்ட கடற்பயணத்தில் தன்னை அதி அற்புதமாக பாதுகாத்த தன் அன்பின் ஆண்டவருக்கு அனந்தம் துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுத்த பின்னர் தனது மிஷனரிப் பணிகளைத் தொடங்கினார்.
சீன தேசத்தின் ஷாங்காய் பட்டணத்தில் கப்பலிலிருந்து தரையிறங்கிய ஹட்சன் தன்னை முற்றும் தனித்தவராகவும், எந்த ஒரு ஆதரவுமற்றவராகவும் கண்டார். ஷாங்காய் பட்டணத்தில் ஏற்கெனவே தங்கியிருந்த லண்டன் மிஷனரி சங்க மிஷனரி டாக்டர் லாக்கார்ட் என்பவர் அவருக்கு ஒரு தனி அறையைக் கொடுத்து தங்கவைத்தார். அடுத்து வந்த நாட்களில் ஹட்சன் டெய்லரை ஷாங்காய் பட்டணத்திலிருந்த அநேக மிஷனரிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். ஷாங்காய் பட்டணத்தில் மருத்துவமனை வைத்து நடத்தும் டாக்டர் மெட்ஹர்ஸ்ட் என்பவருடைய ஆஸ்பத்திரிக்குச் ஹட்சன் சென்று நோயாளிகளுக்கு சிகிட்சை அளிக்கும் அந்த டாக்டர் தனது மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகளுக்கும், அங்கு குழுமியிருக்கும் இதர பொது மக்களுக்கும் ஆர்வத்தோடு சுவிசேஷம் அறிவிப்பதைக் கண்டு பரவசம் அடைந்தார்.
ஹட்சன் ஷாங்காய் பட்டணத்திற்கு வந்து சேர்ந்த நாளின் அடுத்த தினத்தில் அந்தப் பட்டணத்திலுள்ள தங்களது பிரிட்டிஷ் தூதரகத்திற்குச் சென்று தனக்கு வந்திருக்கும் கடிதங்களை எடுக்கச் சென்றார். அவரை மிஷனரியாக சீன தேசத்திற்கு அனுப்பியிருந்த சீன சுவிசேஷ சங்கம் அவருடைய செலவுகளுக்கு எந்த ஒரு பணமும் அனுப்பாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். எப்படியோ சமாளித்து சில சீன கூலிக்காரர்களை கூலி பொருத்தி தான் இங்கிலாந்திலிருந்து பயணப்பட்டு வந்த டம்ஃபிரைஸ் கப்பலிலிருந்த தனது உடமைகளை எடுத்து வந்து தனது சிறிய அறைக்கு வந்து சேர்ந்தார். கடற்பணத்தின் போது ஏற்பட்ட சூறாவழிக்காற்று, கடல் கொந்தழிப்பு காரணமாக அவரது பொருட்களில் பலவும் கடல் நீரால் சேதமடைந்து விட்டதை ஹட்சன் துயரத்தோடு கண்டார்.
ஷாங்காயிலுள்ள மிஷனரிகள் ஹட்சனை உடனடியாக சீன மொழியை நன்கு கற்றுக்கொள்ள வற்புறுத்தவே அவர் ஒரு சீன ஆசிரியரை ஒழுங்கு செய்து தினமும் 5 அல்லது 6 மணி நேரங்கள் சீன மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். ஹட்சன் வெகு துரிதமாகவே தான் தங்கியிருக்கும் ஷாங்காய் பட்டணம் சீன கலகக்காரர்களால் முற்றுகையிடப்பட்டிருப்பதைக் கவனித்தார். கலகக்காரர்களுக்கு உள்ளூர்வாசிகள் ஒபியம், கஞ்சா போன்றவைகளைக் கொடுத்து பணம் சம்பாதித்தனர். திடீரென சீனாவின் மன்னர் படைகள் வந்து கலகக்காரர்களுக்கு ஆதரவாக இருந்த உள்ளூர்வாசிகளைப் பிடித்து அவர்களின் காதுகளைத் துண்டிக்கவும், தலைகளை வெட்டவும் ஆரம்பித்தனர். அது குறித்து ஹட்சன் தனது தங்கை அமலியாவிற்கு இவ்வாறு எழுதினார்:-
"அமலியா, முற்றுகையிடப்பட்ட ஒரு பட்டணத்தை நீ பார்த்திருக்கமாட்டாய். உனது வாழ்வில் அப்படிப்பட்ட ஒரு பட்டணத்தை நீ காணாதிருக்க ஆண்டவர் உனக்குத் தயைபுரிவாராக. நாங்கள் பட்டணத்தின் மதிற் சுவரைச் சுற்றிப்பார்த்து வந்தோம். தெருத் தெருவாக வீடுகள் குண்டுகள் வைத்து தகர்க்கப்பட்டிருப்பதையும், எரித்துச் சாம்பலாக்கப்பட்டிருப்பதையும், நொறுங்குண்டு கிடப்பதையும் நாங்கள் காண முடிந்தது. அவைகளில் குடியிருந்த மக்கள் என்ன என்ன அவல நிலைகளுக்கு உள்ளானார்களோ என்பதை நாங்கள் நினைத்த போது உள்ளம் கலங்கினோம். நாங்கள் கொஞ்ச தூரம் சென்றபோது மன்னர் படையினர் தாங்கள் பிடித்த கலகக்காரர்களை தங்களது பீரங்கி வண்டியில் ஏற்றிக்கொண்டு வருவதையும், அவர்களைத் தொடர்ந்து சுமார் 5 பேர்களை தலை முடியைப்பிடித்து ரோட்டின் வழியாக இழுத்துக் கொண்டு வருவதையும் நாங்கள் கண்டு அதிர்ந்து போனோம். அந்த நிர்ப்பந்தமான ஐவரும் தங்களைக் காப்பாற்றும்படியாக எங்களை நோக்கி கதறினார்கள். அந்த துயரம் தோய்ந்த மக்களைக் காப்பாற்றவோ அல்லது இரட்சகரின் அன்பை அவர்களுக்குச் சொல்லவோ எங்களுக்குக் கூடாது போயிற்று. நான் அவர்களுக்காக ஜெபிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலவில்லை"
ஹட்சன் தமது சிறிய அறையின் ஜன்னல் வழியாக பார்த்தபோது சண்டையின் காரணமாக காயம் அடைந்தோரையும், கொல்லப் பட்டோரின் சடலங்களையும் காண முடிந்தது.
டாக்டர் மெட்ஹர்ஸ்ட் அடிக்கடி சுவிசேஷ ஊழியத்திற்குச் செல்லும்போதெல்லாம் ஹட்சனும் அவருடன் சேர்ந்து கொண்டார். அவரைப்போல தான் தனித்து ஊழியம் செய்யும் நாளை அவர் ஆவலோடு எதிர் நோக்கினார். பின்னர் லண்டன் மிஷனரி சங்கத்தை சேர்ந்த வைல் என்பவருடன் சேர்ந்து பட்டணம் முழுவதையும் சுற்றி நடந்து தேவனுடைய பிரசுரங்களை விநியோகித்தார்.
சீனாவின் மன்னர் படைகள் நாளுக்கு நாள் ஆங்கிலேய குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் நெருங்கி வந்தனர். ஒரு சமயம் அவர்கள் பிரிட்டிஷ் சேமிப்பு கிடங்குகளின் அருகில் வந்து அதை உடைத்து அதிலிருந்து பொருட்களைத் திருடிச் சென்றனர். இந்த நாட்களின் சம்பவங்களை குறித்து ஹட்சன் தமது பெற்றோருக்கு கீழ்க்கண்டவாறு எழுதினார்:-
"ஒரு நாள் அதிகாலை இங்குள்ள மிஷனரிகள் ஒருவருடன் சேர்ந்து எங்கள் அறையின் வராந்தாவில் நின்று கொண்டு சண்டை நடபடிகளை கவனித்துக்கொண்டிருந்தோம். அந்தச் சமயம் சுமார் முக்கால் மைல் தொலைவில் வெடித்த ஒரு குண்டின் மேற்பகுதி விரைந்து எங்களை நோக்கி ஓடி வந்து எங்களைக்கடந்து எங்கள் வராந்தா அறையின் சுவரில் ஆழமாகப்பதிந்து கொண்டது. மற்றொரு நாள் எனது மிஷனரி நண்பர் அலெக்ஸாண்டர் வைல் அவர்கள் தனது புத்தகத்தை மேஜையில் வைத்துவிட்டு வீட்டிற்குள் போய் 5 நிமிடங்களில் திரும்பி வந்து பார்த்தபோது அவர் அமர்ந்திருந்த சாய்வு நாற்காலியின் கைப்பிடி அதை தாக்கிய ஒரு சக்தி வாய்ந்த குண்டினால் முற்றுமாக தூள் தூளாக நொறுக்கப்பட்டு துடைத்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பதை அதிர்ச்சியுடன் கவனித்தோம். இந்த ஆபத்துக்கள் அனைத்திலும் கர்த்தர் ஒருவரே எங்களைப் பாதுகாத்து வருகின்றார்"
இந்த சீன மக்கள் நடுவில் நடக்கும் கொடூர பயங்கரங்களைக் கண்ட ஹட்சன் அவர்கள் நடுவில் இருந்து அவர்களுடைய துயரத்தில் அவர்களுக்கு உதவிசெய்து அவர்களை அரவணைத்து அவர்களுக்கு இரட்சகர் இயேசுவைப் பகிர்ந்து கொள்ள ஆசை கொண்டபோதினும் அவரால் அதைச் செய்ய முடியாத ஒரு காரியமாக இருந்தது.
No comments:
Post a Comment